
சென்னை:மார்ச் 14-
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டரை போன்று பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும், இதனால்
பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளது என்றும் திடீரென வதந்தி பரவியது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்தனர். தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டது போக, கேன் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை பிடித்து சென்றனர். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறும்போது, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வாகனங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல்-டீசல் இருப் பு உள்ளது.
எனவே, வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் போடுவதற்கு முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் கேன்களை தூக்கிக் கொண்டு பெட்ரோல் பங்க்குகளுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபிக்கு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் நிலவும் செயற்கை தட்டுப்பாடு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தலா ஒரு காவலரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரி்க்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.

















