
பாக்தாத்: ஜூலை 1-
அரசு பணத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்த புகாரில் ஈராக் பெண் எம்பியின் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஹிந்த் அல் அப்பாச்சி என்ற எம்பியின் வீட்டில் இருந்து ரூ.539 கோடி ரொக்கப்பணம், 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை பார்த்து அதிகாரிகள் மலைத்துப்போயினர். ஈராக் அதிபராக நிசார் அமிடி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி அதிபராக பொறுப்பேற்றார்.
அதேபோல் ஈராக் பிரதமராக அலி அல் சைதி உள்ளர். இவர் 2026 மே மாதம் 14ம் தேதி பிரதமராக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தான் நாட்டில் பல்வேறு எம்பிக்கள், அரசு அதிகாரிகள் சேர்ந்து ஊழல் செய்துள்ளதாக புகார்கள் கிளம்பின. இந்த புகாரை விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலி அல் சைதி அதிரடியாக உத்தரவிட்டார்.
அதன்படி ஈராக் முழுவதும் ஊழல் செய்ததாக சந்தேகிக்கப்படும் எம்பிக்கள், அரசு அதிகாரிகளின் இல்லங்கள் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பயங்கராவதா எதிர்ப்பு சேவை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியது. குறிப்பாக பல எம்பிக்கள், அதிகாரிகள் தங்களின் வருமானத்தை விட அதிகளவில் சொத்துகள் குவித்து வைத்திருப்பதும், அதுபற்றிய கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இந்த ரெய்டின் முடிவில் எம்பிக்கள், அரசு அதிகாரிகள் என்று மொத்தம் 47 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் எம்பிக்கள் ஆவார்கள்.
மற்றவர்கள் அரசு அதிகாரிகள் ஆவார்கள். இவர்கள் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்தது அம்பலமானதால் கைது செய்யப்பட்டனர்.
இதில் எம்பி ஹிந்த் அல் அப்பாஸி என்ற பெண் எம்பியும் ஒருவர். இவரது வீட்டில் இருந்து 57 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஈராக்கின் கரன்சி(ஈராக் தினார்ஸ்) பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு என்பது சுமார் ரூ.539 கோடியாகும்.
அதேபோல் 27 கிலோ சுத்தமான தங்கம் மற்றும் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பார்த்து ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் மலைத்து போயினர்.





















