
இம்பால்: மே 14-
மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த சர்ச் பாதிரியார்கள், சுராசந்த்பூர் மாவட்டம் லம்கா பகுதியில் ‘தடோவ் பேப்டிஸ்ட் அசோசியஷன்’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் 2 வாகனங்களில் பாதிரியார்கள் மீண்டும் காங்போக்பிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 வாகனங்களையும் வழிமறித்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருடைய உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் பாதுகாப்புப் படையினர், தேசிய நெடுஞ்சாலை-2-ஐ மூடி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நெடுஞ்சாலைதான் மணிப்பூரையும் நாகாலாந்தையும் இணைக்கும் சாலையாகும். அத்துடன் நாட்டின் மற்ற பகுதிகளையும் இந்த தேசிய நெடுஞ்சாலைதான் இணைக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தடோவ் சங்கத் தலைவரும் பாஜக செய்தித் தொடர்பாளருமான மைக்கேல் லாம்ஜாதாங் தடோவ் கூறும்போது, “தடோவ் சமூகத்தினர் தனிப் பிரிவினர். குகி பழங்குடியினத்தவர்களுக்கும் தடோவ் சமூகத் தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிலையில், தடோவ் சர்ச் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்து பெரும் வேதனை அளிக்கிறது. மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையில், தடோவ் சமூகத்தினரையும் குகி என்று தவறுதலாகப் புரிந்து கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் எங்கள் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.


















