Home மாவட்டங்கள் பெங்களூர் முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்

முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்

சென்னை: ஏப்ரல் 9-
எடப்பாடி பழனிசாமியின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அவரின் பேச்சு காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பயந்தவர் அல்ல என்று கூறிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பங்காளிகளை கொலை செய்த வழக்கில் இருந்து தப்பியவர் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. அதனையொட்டி அத்தனை கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக சர்ச்சையாக பேசி வருகிறார். முதலில் உதயநிதி ஸ்டாலின் பால்டாயில் குடித்து போய் சேர்ந்திருக்க வேண்டும்.. இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிலேயே போயிருப்பார் என்று பேசியுள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் இப்படி எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு வாய் கொழுப்பு இருந்தால், கொரோனாவில் முதல்வர் ஸ்டாலின் போய் சேர்ந்திருப்பார் என்று பேசி இருப்பார்.. முதல்வர் ஸ்டாலின் தனது உயிருக்கு பயந்தவர் அல்ல.. கொரோனா நேரத்தில் நேரடியாக சென்று கொரோனா வார்டுக்குள் பார்த்துவிட்டு வந்தவர்.. அப்படியான தலைவரை எடப்பாடி பழனிசாமி கேவலமாக பேசுகிறார் என்றால், அது புதிதல்ல. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை, கொள்ளை எல்லாம் புதிதல்ல. ஏற்கனவே தன்னுடைய பங்காளிகளை 1979லேயே 3 பேரை கொலை செய்த வழக்கில் கொலை குற்றவாளியாக இருந்து, அந்த வழக்கில் இருந்து எப்படி வெளியில் வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அன்று அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால், அவர் ஆயுள் கைதியாக இருந்திருப்பார். எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் கொலைவெறி போகவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் தமிழக மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியால் மூடி மறைக்கப்பட்ட சாத்தான்குளம் கொலை வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. அதில் அத்தனை பேருக்கும் மரண தண்டனையை நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் பல கொலைகள் செய்து கோடிக்கணக்கான சொத்துகள் பறிபோனது. அப்போது ஆட்சியில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி தான். எப்படி சாத்தான்குளம் வழக்கில் குற்றம்சாட்டப்பவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைத்ததோ, அதேபோல் கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.