
அட்லாண்டா: ஜூலை 15.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா தனது ஆதிக்கத்தைத் தொடரும் நோக்கில் களமிறங்குகிறது. மறுபுறம், 1966-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் காத்திருக்கும் இங்கிலாந்து அணி இம்முறை அந்த வாய்ப்பை நனவாக்கும் உறுதியுடன் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
அர்ஜெ்டினா கால் இறுதி சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் பெற்ற வெற்றி, அந்த அணியின் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. இங்கிலாந்து அணியானது நார்வேக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் ஒழுங்கான அணிசேர்க்கையுடன் கட்டுப்பாடான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரை இறுதி ஆட்டத்தில் அனைவரது கவனமும் அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி மீது இருக்கக்கூடும். 39 வயதிலும் அணியின் தாக்குதல் ஆட்டத்தை வழிநடத்தி வரும் மெஸ்ஸி, தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்க விரும்புகிறார்.
அவருக்கு துணையாக ஜூலியன் ஆல்வரஸ், என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடப்பு தொடரில் 8 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, 2 கோல்கள் அடிக்க உதவி உள்ளார். லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்று ஆகியவற்றில் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி, கால் இறுதி சுற்றில் கோல் அடிக்கத் தவறினார். தனது கோல் வேட்டையை இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடரச் செய்வதில் லயோனல் மெஸ்ஸி தீவிரம் காட்டக்கூடும்.
இங்கிலாந்து தரப்பில் ஜூட் பெல்லிங்ஹாம், ஹாரி கேன், புக்காயோ சாகா மற்றும் டெக்லன் ரைஸ் ஆகியோரின் செயல்பாடு முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக பெல்லிங்ஹாமின் மிட்ஃபீல்டு ஆட்டமும், ஹாரி கேனின் கோல் அடிக்கும் திறனும் இங்கிலாந்தின் நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றன.














