
வாஷிங்டன்: ஏப்ரல் 10
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஈரான் தொடர்பாக இரண்டு முக்கிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவுகளில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதில் ஈரான் செய்யும் கெடுபிடிகளை நேரடியாகக் தாக்கியுள்ளார். போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான பின்பு கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்து வந்த நிலையில், ஈரானின் 2 முக்கிய நடவடிக்கை மீண்டும் விலை உயர துவங்கியுள்ளது. மேலும் இன்று பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை துவங்கும் வேளையில் டிரம்ப் தனது பதிவில் அவருடைய வழக்கமான கடுமையான வார்த்தை தொனியை மாற்றியுள்ளார். ஏற்கனவே ஈரான், டிரம்ப் தனது தொனியை மாற்றவில்லை எனில் பாகிஸ்தானில் நடக்கும் பேச்சுவார்த்தையில இந்த போருக்கான தீர்வு எந்த திசையிலும் செல்லாது என்பதை தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் முதல் பதிவு டிரம்ப் தனது முதல் பதிவில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல் செல்ல அனுமதிப்பதில் மிகவும் மோசமான வேலையைச் செய்கிறது என்று தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் இது இரு தரப்பினருக்கும் இடையே உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு முரணானது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் 2வது பதிவு டிரம்பின் இரண்டாவது பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டேங்கர்களிடமிருந்து ஈரான் கட்டணம் வசூலிக்கிறது என்று வெளியான தகவல்களையும் விமர்சித்துள்ளார். ஈரான் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், அப்படி செய்து கொண்டிருந்தால் உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கண்ணிவெடி அபாயம் ஈரான் அரசு வியாழக்கிழமை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக கப்பல் போக்குவரத்தை அனுமதித்திருந்தாலும், முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையில் சீ மைன்கள் அதாவது கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த அபாயத்தின் காரணமாக பாதுகாப்பு கருதி மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ஈரான் அறிவித்துள்ளது.


















