
குவாஹாட்டி, மார்ச் 30- ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று மோதவுள்ளது. எம்.எஸ்.தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு இது முதல் ஆட்டமாக அமையவுள்ளது. கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த பலத்துடன் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. அணிக்கு புத்துணர்வு ஊட்டும் வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் வந்துள்ளார். இது அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்று தந்தவர் சஞ்சு சாம்சன். அதே உத்வேகத்தை ஐபிஎல் சீசனிலும் அவர் தொடர்வார் என எதிர்பார்க்கலாம். மேலும் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சர்பிராஸ் கான், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், கார்த்திக் சர்மா ஆகியோரும் தங்களது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர். பந்துவீச்சில் கலீல் அகமது, ராகுல் சாஹர், முகேஷ் சவுத்ரி, ஜேமி ஓவர்டன் உள்ளிட்டோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரவுள்ளனர். அதேநேரத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, முதல் 2 வார காலம் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இருந்தபோதும் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி ராஜஸ்தான் அணிக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.



















