போபால்: பிப்ரவரி 10-
மத்திய பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.100 மதிப்பிலான கோதுமையை திருடியவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1980-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் பல்காட் கிராமத்தைச் சேர்ந்த முஜித் மகன் சலீம் உட்பட 7 இளைஞர்கள், ஒரு இரவில் வயலில் புகுந்து ரூ.100 மதிப்பிலான கோதுமையைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு குவிண்டால் தரமான கோதுமையின் விலை சுமார் ரூ.115 ஆக இருந்தது. 20 வயதே நிரம்பியிருந்த சலீமுக்கு, அந்தச் செயல் அவசரப்பட்டு செய்த ஒரு தவறாகவோ அல்லது தேவையினால் செய்த சிறு பிழையாகவோ தெரிந்திருக்கலாம்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சலீமின் குடும்பத்தினர் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி பக்கத்து மாவட்டத்தில் குடியேறி உள்ளனர். அங்கு ஒரு சிறிய கடையை நடத்தி வந்துள்ளார். இந்த திருட்டு மீதான வழக்கு நிலுவையிலேயே இருந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேச காவல் துறை அதிகாரிகள், குற்றத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கவும், தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிக்கவும் மாநிலம் தழுவிய இயக்கங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜனவரி 1 முதல் 31 வரை ஒரு சிறப்பு முகாம் நடைபெற்றது.
பழைய வாரண்டுகள் மற்றும் தீர்க்கப்படாத விவகாரங்களை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர். சலீமுடன் கோதுமை திருட்டில் ஈடுபட்ட ஒரு நபர், அவர் இருக்கும் இடம் பற்றிய முக்கியத் தகவலை காவல் துறையினரிடம் வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில், கல்தாகா புறக்காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை அன்று முதியவராகி உள்ள சலீமை கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.














