
சென்னை: மார்ச் 25-
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வியட்நாமிலிருந்து புரூனே வழியாக கஞ்சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.தமிழக சட்டசப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால், சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினருக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அறிவுறுத்தலின்படி, சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், புரூனே நாட்டில் இருந்து ராயல் புரூனே ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது 25 வயதுடைய வடமாநில இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
புரூனே வழியாக முதல்முறை டெல்லியில் இருந்து வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, வியட்நாமில் இருந்து புரூனே நாடு வழியாக வந்த அவரின் சூட்கேசை அதிகாரிகள்சோதனை செய்தனர்.
அதில், ரூ.5 கோடி மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட விலை உயர்ந்த, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இளைஞரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. வழக்கமாக தாய்லாந்து, இலங்கை, அரேபிய நாடுகளில் இருந்து தான் உயர்ரக கஞ்சா கடத்தி
வரப்படும். ஆனால் முதல் முறையாக, வியட்நாம் நாட்டில் இருந்து புரூனே வழியாக சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















