
டாக்கா, மார்ச் 14- வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் விளையாட்டு உணர்வு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் சல்மான் ஆகா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பந்து அவரது பேட் மற்றும் பேடில் பட்டு கீழே விழுந்தது. பந்து டெட் பால் ஆகிவிட்டது என நினைத்த சல்மான், ரன் எடுக்கும் எந்த நோக்கமும் இல்லாமல் அதை எடுத்து பந்துவீச்சாளரிடம் திருப்பிக் கொடுக்க முயன்றார். அதற்காக அவர் கிரீஸை விட்டு வெளியே வந்ததை சாதகமாக பயன்படுத்திய வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் உடனடியாக பெயில்ஸ்களை தட்டிவிட்டு ரன் அவுட் செய்தார். இது கிரிக்கெட் விதிமுறைகளின்படி அவுட் என்றாலும், விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த ரன் அவுட் குறித்து பேசிய சல்மான் ஆகா, “அவர் செய்தது விதிப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் எனது பார்வையில், அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன். நான் விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்டிருப்பேன். நாங்கள் பாகிஸ்தான் அணியில் இதுபோன்று முன்பு செய்ததில்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் செய்ய மாட்டோம். நான் ரன் எடுக்க முயற்சிக்கவில்லை, பந்தை திருப்பிக் கொடுக்கவே நினைத்தேன்” என்று ஏமாற்றத்துடன் கூறினார். ரன் அவுட் ஆன பிறகு களத்தில் இரு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பேசிய சல்மான், “அப்போது என்ன பேசினோம் என எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் நாங்கள் இருவரும் நல்ல வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளவில்லை என்பது மட்டும் உறுதி. அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தால் அது நடந்துவிட்டது. தற்போது எல்லாம் சரியாகிவிட்டது. இது தொடர்பாக மெஹிதி ஹசனிடம் நான் இன்னும் பேசவில்லை, ஆனால் கவலைப்பட வேண்டாம், விரைவில் அவரை கண்டுபிடித்து பேசிவிடுவேன்” எனத் தெரிவித்தார்.



















