
மும்பை, பிப். 9- ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 2 முறை சாம்பியனான இங்கிலாந்து, கத்துக்குட்டியான நேபாளத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்ளும் சேர்த்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்றிய வில் ஜேக்ஸ் 18 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசினார்.முன்னதாக பில் சால்ட் 1 ரன்னில் நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 17 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டாம் பேன்டன் 2, சேம் கரண் 2 ரன்களில் நடையை கட்டினர். நேபாளம் அணி சார்பில் தீபேந்திர சிங் ஐரி, நந்தன் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 185 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணிக்கு குஷால் புர்தேல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். இதனால் 3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்டன. மற்றொரு தொடக்க வீரரான ஆசிஃப் ஷேக் 7 ரன்களில் லியாம் டாவ்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய குஷால் புர்தேல் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் வில் ஜேக்ஸ் பந்தில் அவுட் ஆனார். பவர்பிளேவில் நேபாளம் 2 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் கேப்டன் ரோஹித் பவுடெல், தீபேந்திர சிங் ஐரி ஜோடி சீராக ரன்கள் சேர்த்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் நேபாளம் அணி 12 ஓவர்களில் 101 ரன்கள் குவித்தது. 82 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை சாம் கரண் பிரித்தார். தீபேந்திர சிங் ஐரி 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் சேம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். லியாம் டாவ்சன் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் பவுடெல் வெளியேறினார்



















