
சென்னை: மார்ச் 7-
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. ராமதாஸ் ஆதரவாளர் உள்ளிட்ட மற்ற அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான திமுகவின் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகியோரின் 6 ஆண்டு பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி, 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த பிப்.18-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, வேட்புமனு தாக்கல் கடந்த பிப்.26-ம் தேதி தொடங்கியது. திமுக கூட்டணியில், திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை. பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் ப.சுவாமிநாதன் உள்ளிட்ட 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி இரா.சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பி.தேன்மொழி ஆகியோர் வேட்புமனுக்களை நேற்று பரிசீலனை செய்தனர்.
அப்போது, அன்புமணியின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று சுவாமிநாதன் ஆட்சேபம் தெரிவித்தார். அன்புமணி பாமகவின் தலைவர் இல்லை என்பதற்கான நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் ஆணைய பதில்கள் அடங்கிய ஆட்சேப மனுவை வழங்கினார். அவரது ஆட்சேபங்களை நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.















