
சென்னை : பிப்ரவரி 3-
தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அரசின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆளுநர் ரவி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாரதியார், பாரதிதாசன், மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமனத்திற்கான பெயர் பட்டியலை பரிந்துரைப்பதற்கான தேர்வுக் குழுக்களை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்த தேர்வுக் குழுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பதவிக்கால நீட்டிப்பு தொடர்பான உண்மை மற்றும் சட்ட்ப்பூர்வ நிலைப்பாட்டை பதிவு செய்ய மக்கள் மாளிகை விரும்புகிறது.
யுஜிசி விதிமுறைப்படி, துணைவேந்தர் நியமனத்துக்கான பெயர் பட்டியலை பரிந்துரைக்கும் தேர்வுக் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தரப்பில் ஒரு பிரதிநிதி இடம்பெற வேண்டும். யுஜிசியின் இந்த விதிமுறைக்கு முரணாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழு பரிந்துரையின் பேரில் செய்யப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாதது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களின் கீழ், தமிழ்நாட்டின் ஆளுநர் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார். வரலாற்று ரீதியாக, சட்டப்பூர்வ விதிகளுக்கு இணங்க, முறையாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களை கொண்ட பட்டியலிலிருந்து வேந்தரால், துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழக அரசு ‘2025-ன் தமிழ்நாடு சட்டம் எண் 16-ன் மூலம் பல்கலைக்கழகச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்து, ‘வேந்தர்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘அரசு’ என்ற சொல்லை மாற்றியமைத்து, இனிமேல் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டம் சவால் நிறைந்தது என்பதால், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடமிருந்து எடுத்து அரசிடம் ஒப்படைக்கும் அம்சங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக யூஜிசியின் பிரதிநிதி இல்லாமல் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவது கவலைக்குரிய விஷயம். வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், தேர்வுக்குழுக்களின் பதவிக்காலத்தை நீடித்தும், துணைவேந்தர் பதவிக்கான பெயர் பட்டியலை மார்ச் 21ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக அரசால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுக்கள், துணைவேந்தர் தேர்வுக்காக பட்டியலிடப்பட்டவர்களுடன் கடந்த ஜன.24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நேர்க்காணல்களை நடத்தியுள்ளன. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும், இடைக்கால உத்தரவுகள் நடைமுறையில் உள்ளபோதும் எடுக்கப்படும் நடவடிக்கை வழக்கு நிலுவையில் உள்ளது என்ற கோட்பாட்டின் கீழ் வரும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்வுக் குழுக்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதில் மாநில அரசின் செயல் மற்றும் பட்டியலில் உள்ளவர்களுடன் கலந்துரையாடுவது போன்ற செயல்பாடுகள், நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறுவதாகவும், உத்தரவுகளின் நோக்கத்திற்கு முரணானதாகவும் உள்ளன.


















