தூய்மைப் பணியாளருக்கு உணவு

திருவள்ளூர்: பிப்ரவரி 10-
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1.30 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2025 நவ.15-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் ஊராட்சியில் நேற்று நடை பெற்றது. தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, திருமழிசை பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு வெப்பக் காப்புப் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை வழங்கினார்.
முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.30 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு தினந்தோறும் சுகாதாரமான, ஆரோக்கியமான உணவு சூடு குறையாமல் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.213.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டம், நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நலத்திட்ட உதவிகள்: தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்க முதல்வரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை, பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு நிதிஉதவி உட்பட தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.