
சென்னை: பிப்ரவரி 16-
தமிழக அரசின் 2026 – 2027 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். உரையை ஆளுநர் வாசித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 24ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலுரை ஆற்றினார். இதையடுத்து, மறு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விகள் எழுந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறும்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கூடுகிறது எனத் தெரிவித்தார். இடைக்கால பட்ஜெட் அன்று 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 20 ஆம் தேதி 2026-27 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.
சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று 17 ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உலகெங்கிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இணையதளம் மூலம் பார்க்க முடியும். அமைச்சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள் போன்றவை நேரலை செய்யப்படுகின்றன. விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்தார். முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு நாளை பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார் மாதம் தாக்கல் செய்வது வழக்கம். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் தனித்தனியாக தாக்கல் செய்து வருகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்ய முடியும். பின்னர், ஆட்சி அமைக்கும் கட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
















