Home செய்திகள் உலக செய்திகள் பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு

பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு

வாஷிங்டன், மார்ச் 18- அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வர்த்தக கப்பல்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களை தாக்க ஈரான் பயன்படுத்தி வந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. சுமார் 2,200 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் இருநாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் உலகில் 20 சதவீதம் கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் நடக்கும். அதேபோல் அரபு நாடுகளுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்பட பிற பொருட்கள் இந்த கடல்வழிப்பாதை வழியாக தான் செல்லும். இந்த வர்த்தகத்தை முடக்கும் வகையில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. மேலும் அனுமதியின்றி இந்த கடல்வழிப்பாதையை பயன்படுத்தும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்தது. கூறியது போல் பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றும் அமெரிக்கா? இந்த தாக்குதல்கள் என்பது ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஏவுகணை தளங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இது அமெரிக்காவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது. அரபு நாடுகள் பலவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகும். இதனால் அந்த நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று டிரம்புக்கு அழுத்தம் கொடுத்தன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றும் முனைப்பில் டிரம்ப் உள்ளார். இந்நிலையில் தான் திடீரென்று அமெரிக்கா இன்று ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் க்ரூஸ் ஏவுகணை தளங்களை குறிவைத்து ‘பங்கர் – பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் மத்திய கமாண்ட் படை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முக்கிய விஷயத்தை பதிவு செய்துள்ளார்.