
லாகோஸ், மார்ச் 21 – நைஜீரியாவில் நடைபெற்று வரும் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில், கானா அணிக்கு எதிரான போட்டியில் ருவாண்டா அணியின் 15 வயது வீராங்கனை ஃபேனி உடகுஷிமானிண்டே அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி புதிய உலக சாதனையை படைத்துள்ளார். நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நைஜீரியா இன்விடேஷனல் மகளிர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ருவாண்டா மற்றும் கானா அணிகள் மோதின. இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ருவாண்டா வீராங்கனை ஃபேனி உடகுஷிமானிண்டே, 65 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடினார். இதன் மூலம், மகளிர் டி20 வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீராங்கனை கரேன் ரோல்டன் தனது அறிமுகப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. மேலும், 15 வயது மற்றும் 223 நாட்களில் சதம் அடித்ததன் மூலம்,
ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் விளாசிய வீரர் என்ற மாபெரும் உலகச் சாதனையையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் உகாண்டா வீராங்கனை ப்ரோஸ்கோவியா அலகோ 16 வயது மற்றும் 233 நாட்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஆடவர் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பிரான்ஸ் வீரர் குஸ்டாவ் மெக்கன் 18 வயதில் சதம் அடித்ததே குறைந்த வயது சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபேனி உடகுஷிமானிண்டேவின் அதிரடி சதத்தின் மூலம் முதலில் பேட்டிங் செய்த ருவாண்டா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது.
அவருடன் இணைந்து விளையாடிய மெர்வெயில் உவாசே 32 ரன்கள் எடுத்தார். கானா அணியின் பந்துவீச்சில் 25 வைடுகள் உட்பட பல உதிரி ரன்களும் ருவாண்டா அணிக்குச் சாதகமாக அமைந்தன.



















