
புதுடெல்லி: மார்ச் 25 –
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள ஜண்டேவாலன் கோவில் அருகே விபத்துக்குள்ளானது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 23 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் மொத்தம் 25 பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தின் போது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பேருந்தின் அடியில் சிக்கித் தவித்ததாகவும், அவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

















