
குவாஹாட்டி: மார்ச் 27-
அசாம் மாநில சட்டப்பேரவையிலுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அசாமின் வெற்றிகரமான முதல்வராக வலம் வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க 65 தொகுதிகள் தேவை. இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சாரமாக கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்த பிரபல பாடகர் ஜூபின் கார்கின் விவகாரம் உள்ளது. இரு கட்சிகளுமே அந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் பாஜக மேலிடம் `ஜதி மதி பேட்டி’ என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இது அசாம் மாநிலத்தில், பெரும்பாலும் சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்த்துப் போராடும் சூழலில், அங்குள்ள பூர்வீக மக்களின் கலாச்சார அடையாளம், நில உரிமைகள் மற்றும் தங்கள் வீடுகளின் மீதான நியாயமான உடைமை ஆகியவற்றைப் பாதுகாப்பதை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஓர் அரசியல் முழக்கமாகும். அந்த முழக்கத்தை முன்னெடுத்து வாக்கு வேட்டையாடி வருகிறது பாஜக.
அதேநேரத்தில், அசாமுக்கு புதிய தலைமை வேண்டும். அசாம் முழுவதுமே பாஜகவுக்கு எதிரான அலை காணப்படுவதாக தனது பிரச்சாரத்தில் கூறி வருகிறார் கவுரவ் கோகோய். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதேநேரத்தில் அவருக்குப் போட்டியாக களத்தில் இறங்கி கடும் சவால் அளித்து வருகிறார் கவுரவ் கோகோய். இந்தத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க பாஜக மேலிடம் தீவிர பிரச்சாரத்தில் தலைவர்களை இறக்கி விட்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் மேலிடம், இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. முதன்முறையாக கவுரவ் கோகோய் சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.


















