Home தலைப்பு செய்தி பெட்ரோல் டீசல் விலை உயராது

பெட்ரோல் டீசல் விலை உயராது

புதுடெல்லி: மார்ச் 27 –
சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது.
அதன்படி, ரூ.13 ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ரூ.10 ஆக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்தியாவில் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வரி குறைப்பு,
எரிபொருளின் விலையை குறைக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இந்த வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறையாது. ஆனால், விலை உயராமல் இருக்கும் என்று கூறியிருக்கின்றனர். இந்த கூற்றை உறுதி செய்யும் வகையில், எரிபொருளின் சில்லறை விற்பனை விலைகளைக் குறைப்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், இந்தக் குறைப்பினால் மத்திய அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வரி குறைப்பு ஏன்?
ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. சவுதி, கத்தார், பஹ்ரைன், அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த எண்ணெய் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் பயணித்து வர வேண்டும். இந்த நீரிணையை கடந்த 4 வாரங்களாக ஈரான் முடக்கியிருக்கிறது. எனவே, இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டிருக்கிறது.
இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வேறு நாடுகளிலிருந்து எண்ணெய்யை வாங்க தொடங்கியிருக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. நயாரா நிறுவனம் பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 என உயர்த்தியிருந்தது. இது நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த அச்சத்தை குறைக்கவும், பெட்ரோல் டீசல் விலை உயராமல் தடுக்கவும் தற்போது வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.