
பாட்னா, மார்ச் 30- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இன்று காலை சுமார் 10:00 மணியளவில் சட்ட மேலவை தலைவர் அவதேஷ் நாராயண் சிங்கை நேரில் சந்தித்த நிதிஷ் குமா, தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். கடந்த மார்ச் 16ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விதிமுறைப்படி 14 நாட்களுக்குள் மாநில பதவியை அவர் துறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த முடிவைத் தொடர்ந்து, அவர் விரைவில் தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமார் கடந்த சில வாரங்களாக பீகார் மாநிலம் முழுவதும் மேற்கொண்ட ‘சம்ரித்தி யாத்திரை’ மார்ச் 26ம் தேதி பாட்னாவில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையின் போது 32 மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றினாலும், மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலுக்குச் செல்வது குறித்தோ அல்லது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது குறித்தோ எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது அவர் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ஏப்ரல் 30ம் தேதிக்குள் அவர் முதல்வர் பதவிலிருந்தும் விலகி, முறைப்படி நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமாரின் இந்த அதிரடி மாற்றத்தால் பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் சட்டமன்றம் அல்லது மேலவை என எதிலுமே தற்போது உறுப்பினராக இல்லாததால், முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஏப்ரல் 13ம் தேதிக்குப் பிறகு பீகார் அரசியலில் ஒரு புதிய தலைமை உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

















