
வாஷிங்டன்: ஏப்ரல் 2-
நேட்டோ ஒரு ‘காகிதப் புலி’ என்றும் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் இணைய வேண்டும் என்றும் இதற்காக தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட இதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார்.
இந்நிலையில், பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் இதழுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், ‘‘ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு நட்பு நாடுகள் ஆதரவு அளிக்கத் தவறியதால், நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறேன்’’ என்றார்.நேட்டோ கூட்டணியை ஒரு ‘காகிதப் புலி’ என்று வர்ணித்த ட்ரம்ப், நேட்டோவின் நம்பகத்தன்மை குறித்து தனக்கு நீண்டகாலமாகவே சந்தேகம் இருந்ததாகவும் கூறினார். பிரிட்டனின் போர்க்கப்பல் படையின் நிலையை நேரடியாகச் சாடிய ட்ரம்ப், ‘‘உங்களிடம் ஒரு கடற்படை கூட இல்லை. நீங்கள் மிகவும் பழமை வாய்ந்தவர்கள், உங்களிடம் இருந்த விமானம் தாங்கி கப்பல்களும் வேலை செய்யவில்லை’’ என்றார்.


















