
டெல்லி: ஏப்ரல் 10-
சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திருமண பிரச்சனையை, ‘மகாபாரதப் போர்’ போன்ற சட்டப் போராட்டம் என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்ச நீதிமன்றம். “இந்தத் திருமண உறவு ஏற்கனவே செத்துவிட்டது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பின் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தம்பதிக்கு விவாகரத்து வழங்கினர். மேலும், மனைவிக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர். வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் பொதுவாகவே விவாகரத்து வழக்குகள் குறைவாகவே உள்ளன. கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது முடிந்தவரை நமது நாட்டில் அதைப் பேசி தீர்க்கவே பார்ப்பார்கள். நிலைமை கையை மீறிச் செல்லும்போது மட்டுமே விவாகரத்து வழக்குப் போடுவார்கள். நீதிமன்றங்களைத் தாண்டி சுப்ரீம் கோர்ட் வரை சென்ற விவாகரத்து வழக்கு ஒன்று குறித்து நாம் பார்க்கலாம்.
பின்னணி இந்தத் தம்பதிக்கு 2010ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், 2016ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.. ் பிறகு தொடங்கிய சட்டப் போராட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீடித்தது. மனைவியைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும், ஏன் அவரது வழக்கறிஞர்கள் மீது கூட கணவர் அடுக்கடுக்கான புகார்களை அளித்து வந்துள்ளார். இந்த வழக்கு பல்வேறு மேல்முறையீட்டைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கணவர் தரப்பு குடும்ப நல நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், பராமரிப்பு தொகையையும் தொடர்ந்து வழங்க மறுப்பதாகவும் தனக்கு நிதி சிக்கல் உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க குடும்ப பிஸ்னஸ்களில் இருந்து வேண்டும் என்றே விலகிவிட்டதாகத் தெரிவித்தார்.
கணவர் தனக்கு வருமானம் இல்லை என்று வாதிட்ட போதிலும், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அந்த நபர் வேண்டும் என்றே தனது குடும்பத் தொழில்களில் இருந்து விலகி, திட்டமிட்டு ஒரு ‘நிதிச் சிக்கல்’ போன்ற மாயையை உருவாக்கியுள்ளார் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. தற்போதைய கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காக ரூ. 5 கோடி தொகையை ஓராண்டிற்குள் வழங்க வேண்டும் என்று கணவருக்குக் கெடு விதித்துள்ளது.



















