
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 10-
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்தத்தின் பின்னணியில், நாளை இந்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் ராஜதந்திர முயற்சியால் சாத்தியமான இந்த தற்காலிக போர்நிறுத்தம், மோதல் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவும் ஈரானும் தயாராக உள்ளன.
பாகிஸ்தான் தலைநகர் ஏற்கனவே காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்தின் முக்கிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ மாற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம், முக்கிய அரசு நிறுவனங்கள், சொகுசு விடுதிகள் மற்றும் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டல சாலைகளில் பொது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்திய காவலர்கள் நகரம் முழுவதும் பல சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். வெளிநாட்டு குழுக்களின் தடையற்ற பயணத்தை உறுதி செய்ய போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
முக்கியமான இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தலைநகரில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, அமெரிக்க தூதரிடம் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு “உயர்மட்ட பாதுகாப்பு” வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
30 பேர் கொண்ட அமெரிக்க குழுவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயர்மட்ட இராஜதந்திர கூட்டங்கள் வழக்கமாக நடைபெறும் ‘ஹோட்டல் செரீனா’வில் இந்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வான்வழி பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் விமானப்படை ஐ எல்-78 எரிபொருள் டேங்கர்கள் மற்றும் சி-130 விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.
ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் காணப்பட்டன, அவை ஈரான் பிரதிநிதிகளின் விமானத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிகிறது. நாளை நடைபெறும் பேச்சு வார்த்தை எப்படி இருக்கும் என்பதை அறிய உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.




















