
புதுடெல்லி: ஏப்ரல் 11-
ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில்
இந்தியர்கள் பலரை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த போரில் இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவில் உள்ள குடும்பத்தை சேர்ந்த திவ்யா என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “ரஷ்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் 26 இந்தியர்களை அழைத்துச் சென்றனர்.
சுற்றுலா, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் அழைக்கப்பட்ட இவர்களின் பாஸ்போர்ட், அடையாள ஆவணங்கள் பறிக்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை கண்டறிந்து தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு நீதிபதி கள் தள்ளி வைத்தனர்.


















