
மாஸ்கோ: ஏப்ரல் 13-
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள சூழலில், மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதில் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் நிலைமை மேலும் மோசமாகுமோ என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது
உள்ளே வரும் புதின் இந்த 21 மணி நேரப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ரஷ்யா இதில் தலையிட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் புதின் தனது காய்நகர்த்தலைத் தொடங்கியுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனைத் தொடர்பு கொண்ட புதின், மத்திய கிழக்கில் அமைதி நிலவ ரஷ்யா உதவத் தயார் எனத் தெரிவித்துள்ளார். போரை விடவும், ராஜதந்திர ரீதியாக இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே புதினின் கருத்தாக உள்ளது.. அமெரிக்காவின் பிடியிலிருந்து வளைகுடா நாடுகளைத் தனது பக்கம் ஈர்க்க ரஷ்யா இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது.
டிரம்ப் மிரட்டல் முன்னதாக பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கக் கடற்படை முடக்கும் என்றும் எந்தவொரு கப்பலும் ஹார்முஸை கடக்க முடியாது எனவும் கூறியுள்ளார். All or none எனச் சொல்லியுள்ள டிரம்ப், “இதுதான் என்னுடைய டீல்” என்றும் கூறியுள்ளார். மேலும், சரியான நேரத்தில் ஈரானைத் தண்டிப்போம் என எச்சரித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் பிரதிநிதிகள் ஒரே இடத்தில் கூடினர். அப்போது பேச்சுவார்த்தை பல மணி நேரம் நடந்த போதிலும் எந்தவொரு சுமூக முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்” என நிபந்தனை விதித்தார்.



















