
டெல்லி: ஏப்ரல் 25 –
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதான அதிருப்தியின் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் உள்ளனர். கட்சியின் முக்கியத் தலைவரான ராகவ் சத்தா எம்.பி., அக்கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே, கட்சித் தலைமைக்கும் ராகவ் சத்தாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், அவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக நேற்று அறிவித்தார். அவருடன், அக்கட்சியின் மேலும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களும் பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளனர்.
‘நேர்மை இல்லாத கட்சி’: டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகவ் சத்தா நேற்று கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களில் மூன்றில் 2 பங்கினர் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளோம். என்னுடன் சேர்ந்து ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி என மொத்தம் 7 எம்.பி.க்கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி உள்ளோம். எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தேன். ஆனால், நேர்மையான அரசியலை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது அந்த பாதையில் இருந்து விலகிவிட்டது. நியாயமான மனிதனாகிய நான் தவறான, நேர்மை இல்லாத ஒரு கட்சியில் இருந்ததை இப்போது உணர்கிறேன். எனவே, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி மக்களுக்காகப் பணியாற்ற முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


















