
திருமலை:ஏப்ரல் 25 –
திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ரூ.95 லட்சம் மதிப்புள்ள 7 தங்க பதக்கங்களை பெங்களூருவை சேர்ந்த பக்தர் வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையானை பெங்களூருவை சேர்ந்த பக்தர் டாக்டர்.எம்.மஹாதேவம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று தரிசனம் செய்தனர். அதன் பின்னர், கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக மண்டபத்தில், மஹாதேவம்மா ஏழுமலையானுக்கென ஆர்டர் கொடுத்து செய்த 7 தங்க பதக்கங்களை, தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திராவிடம் ஒப்படைத்தார்.
ஒவ்வொன்றும் விதவிதமான கற்கள் பொறிக்கப்பட்டு மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 753 கிராம்கள் என்றும், இதன் மதிப்பு ரூ.94.80 லட்சம் எனவும் மஹாதேவம்மா தெரிவித்தார். இவை உற்சவங்களின் போது உற்சவ மூர்த்திகளுக்கு உபயோகப்படுத்தப்படலாம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.


















