
டெல்லி: ஏப்ரல் 25 –
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார். இவர் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் மூலம் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 19 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்த நோட்டீஸ்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் நிராகரித்தனர். இந்தச் சூழலில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீண்டும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்ந்து பதவியில் இருப்பது அரசியலமைப்பு மீதான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், அவர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுகளை நிறைவேற்றும் ஏவல் ஆளாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
ஒரு ஆணையரை நீக்கக் கோரும் நோட்டீஸைத் தாக்கல் செய்ய 50 எம்பிக்களின் ஆதரவு போதும் என்ற நிலையில், 73 எம்.பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்த நோட்டீஸில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, இடதுசாரி கட்சிகள், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), ஆர்ஜேடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 73 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்த நோட்டீஸில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாரபட்சம் காட்டுவதாகவும், தேர்தல் நடத்தை அமலில் இருக்கும் நிலையில், அதை மீறும் வகையில், ஏப்ரல் 18 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியது குறித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள் மீது ஞானேஷ் குமார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், ஞானேஷ் குமாருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரக்கோரும் நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் ஏற்க வேண்டும் என்றும், ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


















