
புதுடெல்லி: மே 22-
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோதி பயங்கரமாக வெடித்தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வெடிபொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை எடுத்துச் சென்றது ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடீல் அகமது தர் என்பது தெரியவந்தது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது புல்வாமா மாவட்டத்தின் கர்பத்போரா பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஹம்சா புர்ஹான் என தெரியவந்தது. இவர் அல் பத்ர் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். இச்சம்பவத்துக்குப்பின் ஹம்சா புர்ஹான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (ஊபா) கீழ் தீவிரவாதியாக மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில், ஹம்சா புர்ஹான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் ஹம்சா புர்ஹான் இறந்தார்.


















