Home செய்திகள் தேசிய செய்திகள் இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு

இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு

டெல்லி: ஜூலை 1-நம் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த உபேந்திர திவேதி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி பொறுப்புகளை ஒப்படைத்தார். நம் நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதி தீரஜ் சேத் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2 ஆண்டுகளாக அவர் அந்த பொறுப்பில் செயல்பட்டு வந்தார். பாகிஸ்தானுடனான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது ராணுவம் இவரது தலைமையில் தான் நேர்த்தியாக செயல்பட்டார்.
இந்நிலையில் தான் உபேந்திர திவேதி நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவரை தொடர்ந்து நம் நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று அதிகாரப்பூர்வமாக நம் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றார். தீரஜ் சேத்திடம், உபேந்திர திவேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்புகளை ஒப்படைத்தார். இதன்மூலம் நம் நாட்டின் 31வது ராணுவ தலைமை தளபதியானார் தீரஜ் சேத். தீரஜ் சேத் கடந்த 1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ பணியில் சேர்ந்தார். கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் ‘ஹையர் கமாண்ட் கோர்ஸ்’ (Higher Command Course) முடித்துள்ளார். பாரிஸில் உள்ள மதிப்புமிக்க ‘கமாண்ட் அண்ட் ஸ்டாஃப்’ படிப்பையும் முடித்துள்ளார்.
இவர் Armoured Regiment-யில் பிரிகேட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கிளச்சிஎதிர்ப்பு படையின் தலைவராக செயல்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரலாக, இந்திய ராணுவத்தின் முக்கிய தாக்குதல் பிரிவுகளில் ஒன்றான ‘சுதர்சன் சக்ரா கார்ப்ஸ்’ (Sudarshan Chakra Corps) அமைப்புக்கு தலைமை வகித்துள்ளார். டெல்லி பிராந்தியத்தின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்காக பணியாற்றி உள்ளார். ராணுவ கமாண்டராக பதவி உயர்வு பெற்ற பிறகு, தென்மேற்கு கமாண்ட் மற்றும் தெற்கு கமாண்ட் ஆகிய இரண்டு செயல்பாட்டு கமாண்டுகளுக்குத் தலைமை தாங்கி உள்ளார். இவர் தற்போது நம் நாட்டின் ராணுவத்தின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாகி உள்ளார்.