Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்

இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்

புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேருக்கு நேர் இரு தரப்பும் போராட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போன்று திமுகவும் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்து விலகியதால், நாடாளுமன்றத்தில் தனியே போராட்டம் நடத்தியது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் அவையில் கடும் அமளி நீடித்தது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். மோடியின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதற்கிடையே இன்று நாடாளுமன்றம் கூடும் முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்திய அதே நேரத்தில் ஆளும் கூட்டணி எம்பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்பிக்கள் தனியாக போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட திமுக, நாடாளுமன்ற வளாகம் அருகே தனியாக போராட்டத்தில் ஈடுபட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தத்தால், பிரதமர் மோடி மவுனம் கலைத்த நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், இளைஞர்களுக்கு தீங்கு விளைவித்ததே மோடிதான் என்று பதிவிட்டு இருந்தார். ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
இளைஞர்களுக்கு தீங்கை ஏற்படுத்தியதே நீங்கள்தான். கல்வி அமைப்பை முழுமையாக கைப்பற்றவும், அழிக்கவும், அனுமதியும், ஊக்கமும் நீங்கள் கொடுத்தீர்கள். இதற்கு காரணமான ஒவ்வொருவரையும் பாதுகாக்கிறீர்கள். மாணவர்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது. தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும். மாணவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார். காலையில் திடீர் பரபரப்பு நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரிலும் இன்றும் இளைஞர்கள் குவிந்துள்ளனர். போராட்டம் காரணமாக டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று காலை 7.30 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.