
புதுடில்லி: ஜூன் 21- இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை, நம் வெளியுறவுத் துறை துவங்கி உள்ளது.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையே, கடந்த ஒரு வாரமாக மோதல் நடக்கிறது. இரு தரப்பும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசம்அடைந்து வருகிறது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களையும் மீட்க நம் வெளியுறவுத் துறை முடிவு செய்தது. டெல் அவிவ் நகரில் செயல்படும் நம் துாதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். ’துாதரக இணையதளத்தில் இந்தியர்கள் பதிவு செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் ஆகிய இடங்களில் இருந்து, இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை நம் துாதரக அதிகாரிகள் நேற்று துவங்கினர். மீட்கப்பட்ட இந்தியர்கள், இஸ்ரேல் – ஜோர்டான் எல்லை வழியாக, ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அங்கிருந்து விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். இதற்காக ஜோர்டான் அதிகாரிகளுடன் நம் துாதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.