ஈரான் – இஸ்ரேல் போர்: ஒதுங்கி செல்லும் உலக நாடுகள்!

இதோ… மற்றும் ஒரு போர். ஈரான் நாட்டின் அணு ஆயுதக் களங்களின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய அங்கமான ‘யுரேனியம் செறிவூட்டல்’ பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் முக்கியமான ‘நடான்ஸ்”, குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானிகள், தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாய் இஸ்ரேல் நம்புகிறது; ஈரான் நாட்டின் அணு ஆயுத வலிமை, இஸ்ரேல் நாட்டின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கருதுகிறது. மிகவும் அவசியமான தற்காப்பு நடவடிக்கை என்று இத்தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.
ஈரான் நாட்டின் அணு ஆயுத ‘வசதிகள்’ முழுவதுமாக அகற்றப்படும் வரை, மேலும் சில நாட்களுக்கு இத்தாக்குதல் நீடிக்கும் என்றும் இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச சமூகம் என்ன சொல்லும்..? எப்படி எதிர்வினை ஆற்றும்..? எங்கிருந்து என்னென்ன தடைகள் வரும்..? என்றெல்லாம் இஸ்ரேல் யோசிப்பதே இல்லை. ‘எங்கள் திட்டங்கள், எங்கள் செயல்பாடுகள்.. இவற்றை நாங்களே தீர்மானிப்போம். ‘பிறரின்’ கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை’ என்பதே இஸ்ரேல் நாட்டின் நிரந்தர நிலைப்பாடு.
‘சர்வதேச அழுத்தம்’ முற்றிலும் செயலிழந்து போன, ஐக்கிய நாடுகள் சபை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாத ஓர் இடம் – இஸ்ரேல்.
வியப்பில் ஆழ்த்துகிற விந்தை – இஸ்ரேல் குறித்து சொன்னது அனைத்தும் அப்படியே ஈரானுக்கும் பொருந்தும். ‘உலகம்’ பற்றி கவலை கொள்ளாத ஒரு நாடு – ஈரான்! ‘தான் சொல்வதே சரி, தான் செய்வதே அறம்’ என்று ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதே ஈரான் நாட்டின் ‘அடையாளம்’!
அதாவது, இரண்டு அடங்காப் பிள்ளைகளின், மற்றுமொரு அத்துமீறிய ஆட்டமாகவே இஸ்ரேல் நடத்திய தாக்குதலைப் பெரும்பாலான நாடுகள் பார்க்கின்றன.
‘இந்தத் தாக்குதல் எங்கள் மீதான போர்ப் பிரகடனம்’ என்று அறிவித்துள்ளது ஈரான் அரசு.
‘ஈரான் மீது தாக்குதல் நடத்திய ‘ஜியான்’ ஆட்சி, மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்’ என்று ஈரான் நாட்டின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கோமேனி அறிவித்துள்ளார். ஏற்கனவே, இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் தொடங்கி விட்டதாய் செய்திகள் கூறுகின்றன.1988 ஈரான் – இராக் போருக்குப் பிறகு முதன்முறையாக தனது நாட்டுக்குள் அந்நிய தாக்குதலை ஈரான் சந்தித்து உள்ளது.
தனது நாட்டின் இஸ்ரேல் நாட்டின் வரம்பு மீறிய தாக்குதலுக்கு, பிற நாடுகள் ‘கடுமையான கண்டனம்’ தெரிவிக்கும்; சமாதான முயற்சிகளுக்கு முன்னுரிமை தாருங்கள் என்று கோரிக்கை விடுக்கும். மிதமிஞ்சிப் போனால், அமைதி வேண்டி ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றும்! இதற்கு மேல் உலக நாடுகள் இதில் தலையிட வாய்ப்பு இல்லை.