
லக்னோ: ஜூன் 30-
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆசாத் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் அறிந்து அவரது பீம் ஆர்மி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சந்திரசேகரின் பீம் ஆர்மி அமைப்பினர் நேற்று திடீரென கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசாத் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான சந்திரசேகர் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தவறான தகவல் காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது ஆசாத் சமாஜ் கட்சி. இதன் தேசிய தலைவராக உள்ள சந்திரசேகர் பீம் ஆர்மி என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் தலித் இளைஞர்களை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை சந்திக்க சென்றபோது கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று 5 மணி நேரம் இந்த கலவரம் நடந்தது. சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக வெளியான ஒரு தவறான தகவலே இந்த வன்முறைக்கு காரணம் ஆகும். அவரது ஆதரவாளர்கள் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். பல வாகனங்களை சாலையில் கவிழ்த்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.