என்ஐஏ தீவிர விசாரணையில் புதிய தகவல்

பஹல்காம், ஜூன் 23— பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷிர் அகமது ஜோதர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தாக்குதலில் 3 பேர் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.