எல்லை மாநிலங்களில் பாதுகாப்புஒத்திகை தள்ளிவைப்பு

புதுடெல்லி, மே 29- பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஹரியானா மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது. அதனால் ‘ஆபரேஷன் ஷீல்ட்’ ஒத்திவைக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்தது. இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. சண்டிகர் நிர்வாகமும் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைத்தது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.ஹரியானாவில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 22 மாவட்டத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தகவல். ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு முன்னோட்டமாக கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
அப்போது போர் ஏற்பட்டால் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது அளிக்கப்பட்ட பயிற்சிக்குப் பிறகு நடைபெற்ற முதல் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.