ஒரு பிளேட் உணவு ரூ.5,000மஹா., அரசு மகா விருந்து

மும்பை: ஜூன் 27-
மஹாராஷ்டிராவில், பார்லி., மதிப்பீட்டு குழுவின் பவள விழா கூட்டத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, வெள்ளித்தட்டில் சாப்பாடு பரிமாறப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு மும்பையில் சட்டசபை கட்டடத்தில் உள்ள விதான் பவனில், சமீபத்தில், பார்லி., மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா துவக்கி வைத்தார். நாடு முழுதுமிருந்து 600 விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பார்லி., மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, வெள்ளித்தட்டில் உணவுகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஒருவருக்கு தலா, 5,000 ரூபாய் மதிப்பிலான உணவுகள் வெள்ளித்தட்டில் பரிமாறப்பட்டதாகவும், ஒரு வெள்ளித்தட்டு தலா, 550 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, மஹாராஷ்டிரா சட்டசபை காங்., தலைவர் விஜய் வடெட்டிவார் நேற்று கூறுகையில், ‘’மாநில அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் போது, விருந்தினர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு வழங்க வேண்டிய அவசியம் என்ன?‘’விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை; தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கவில்லை; பல நலத்திட்டங்களுக்கான நிதி இல்லை. நிலைமை இப்படி இருக்கையில், ஒரு பிளேட் உணவுக்கு, 5,000 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த ஆடம்பரம் தேவையா?’’ என்றார். சமூக ஆர்வலர் கும்பர் கூறுகையில், ‘’600 விருந்தினர்களுக்கு செலவிடப்பட்ட பணம், மொத்தம் 27 லட்சம் ரூபாய். சிக்கனத்தை போதிக்கும் மதிப்பீட்டு குழுவுக்கு, மக்களின் பணத்தை இப்படி வீணடிக்கலாமா?’’ என, கேள்வி எழுப்பினார்.