
டெஹ்ரான்: ஜூன் 20-
ஈரானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாட்டின் அல் உடாய்ட் விமானப்படை தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அமெரிக்கா தனது விமானங்களில் பெரும்பாலானவற்றை ஜூன் 5 முதல் 19 வரை நீக்கியுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. அங்கே 40க்கும் மேற்பட்ட விமானங்கள் இருந்த நிலையில், ஜூன் 19 ஆம் தேதிக்குள் மூன்று விமானங்கள் மட்டுமே காணப்பட்டன. ஈரானுக்கு பயந்து கத்தார் தளவாடத்தை அமெரிக்கா காலி செய்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க விமானப்படை கத்தாரிலிருந்து வெளியேற்றம் கடந்த இரண்டு வாரங்களில் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து சுமார் 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. ஈரானிய தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Planet Labs PBC இலிருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ நிலையமான அல் உடாய்ட் விமானப்படை தளம், விமானங்களின்றி வெறிச்சோடியது போல் காணப்படுகிறது. ஜூன் 5 ஆம் தேதி, C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் மற்றும் நவீன உளவு விமானங்கள் உட்பட சுமார் 40 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஜூன் 19 ஆம் தேதி, மூன்றே மூன்று விமானங்கள் மட்டுமே இருந்தன.
இதற்கிடையில், கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை அன்று, “பிராந்திய மோதல்கள் அதிகரித்து வருவதால், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தளத்திற்கான அணுகல் கட்டுப்படுத்தப்படும்” என்று அறிவித்தது. AFP இன் பொது விமான கண்காணிப்பு தரவு பகுப்பாய்வின்படி, ஜூன் 15 முதல் 18 வரை, KC-46A பெகாசஸ் மற்றும் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானங்கள் உட்பட குறைந்தது 27 இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பறந்தன. புதன்கிழமை நிலவரப்படி, அந்த விமானங்களில் 25 விமானங்கள் இன்னும் ஐரோப்பாவில் இருந்தன
இரண்டே இரண்டு விமானங்கள் மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளன.இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நீண்ட தூர விமான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா நீண்ட தூர பணிகளுக்கு தயாராகி வருவதற்கான அறிகுறியாக இது இருக்கலாம்.