சென்னை: மே 1 –
உழைப்பாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் இன்று மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னதாக அவர் விடுத்திருந்த மே தின வாழ்த்து குறிப்பில், “நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார் கை என்று பாவேந்தர் பாரதிதாசன் தொழிலாளத் தோழர்களின் மகத்துவத்தைப் போற்றினார். உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்களுக்காக மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை. சென்னையில் மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளைக் கழக ஆட்சிதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செய்து வந்தனர்.
அப்பெருந்தலைவர்களின் வழி நடக்கும். நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஓராண்டில் செய்யப்பட்ட குறிப்பிடத்தகுந்த சாதனைகளைச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் ஸ்விகி ஸொமாட்டோ அமேசான் போன்றவை வாயிலாகப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேவைகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியமும் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2000 தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர்களுக்கு ரூபாய் 4 கோடி செலவில் புதியதாக e-Scooter வாங்கும் செலவினத்தில் தலா ரூ.20,000/- மானியமாக வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 1.5 இலட்சம் கிக் தொழிலாளர்களுக்குக் குழுக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்துவதுடன், அவர்கள் பணிகளுக்கிடையே ஓய்வு எடுக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள பெண்கள் / திருநங்கைகள் 1,500 பேருக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்கும் செலவினத்தில் ரூ.1 இலட்சம் மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழில்களில் 4,37,750 தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் -1200/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.