
லீட்ஸ், ஜூன் 21- ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம் பெற்றார். இதேபோன்று 8 வருடங்களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்பினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குரும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றனர்.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்கினார்கள். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. இன்ஸ்விங், ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்பட்ட பந்துகள், அவுட் ஸ்விங் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க முயற்சித்தனர்.
ஆனால் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி பொறுமையாக செயல்பட்டது.ஆஃப் திசையை குறிவைத்து இருவரும் சீராக ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார்.
ஆனால் ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் எந்தவித வாய்ப்புகளையும் வழங்காமல் அற்புதமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஆனால் முதல் செஷன் முடியும் தருவாயில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார். பிரைடன் கார்ஸ் வைடாக வீசிய பந்தை கே.எல்.ராகுல் கவர் டிரைவ் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு முதல் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனது. கே.எல்.ராகுல் 78 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி 24.5 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய அறிமுக வீரரான சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பென் ஸ்டோக்ஸ் லெக் திசையில் வைடாக வீசிய பந்தை சாய் சுதர்சன் தட்டிவிட முயன்றார். ஆனால் அதை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் அற்புதமாக கேட்ச் செய்தார்.