புதுடெல்லி: நவ.18: கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது. ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பில் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம், சீன அரசு, அந்நாட்டு பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஊக்கத் திட்டங்களை அறிவித்த நிலையில், சீனப் பங்குச் சந்தை ஏற்றத்தைக் கண்டு வந்தது.
இந்நிலையில், இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீட்டை சர்வதேச பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ குறைத்திருந்தது.
ஆனால், தற்போது அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சீனப் பங்குச் சந்தை மீதான மதிப்பீட்டை சிஎல்எஸ்ஏ நிறுவனம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், “ட்ரம்ப் மீண்டும் அதிபராகியுள்ள நிலையில் சீனா – அமெரிக்கா வர்த்தகத்தில் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால், சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். இரண்டாவது, சமீபத்தில் சீனா அறிவித்த ஊக்கத்திட்டங்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை ஏற்படுத்த போதுமானதாக இல்லை. இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர் சீனாவிலிருந்து வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது.அதுவே இந்தியாவை எடுத்துக் கொண்டால், சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா உடனான இந்தியாவுக்கான மிகக் குறைவு. வர்த்தக ரீதியாக இந்தியா பாதுகாப்பான நிலையில் உள்ளது. இதனால், முதலீட்டாளர் இந்தியப் பங்குச் சந்தையை நோக்கி திரும்பு சூழல் உருவாகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.