தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்

அகமதாபாத், ஜூன் 13-
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்நிலையில், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அகமதாபாத் நகரிலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை ஆதரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறோம்.
சம்பவம் நடந்த இடத்தில் அவசரகால மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் விபத்து தொடர்பாக கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்படும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவ அவசரகால மையம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.