திண்டுக்கல்: டிச.13-
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 32 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் உள்ள திருச்சி சாலையில் நான்கு மாடி கட்டிடத்தில் சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை (டிச.12) இரவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்து சிதறியதில் தீப்பற்றியது. தீ மளமளவென கீழ் தளத்திலும், அதைத் தொடர்ந்து மேல்தளங்களுக்கும் பரவியது. நோயாளிகள், உதவியாளர்களை உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் வெளியேற்றினர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மாடியிலிருந்து கீழே வர முடியாமல் சிக்கிக் கொண்ட நோயாளிகளை ஏணி வைத்து மேலே சென்று ஜன்னலை உடைத்து மீட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரவு 11 மணியளவில் தீயை அணைத்தனர். அதன் பிறகு அனைத்து அறைகளிலும் சோதனையிட்டனர்.