திருப்பதி, பிப். 10-
திருப்பதி லட்டுக்களில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு நான்கு பேரை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் முதல் முறையாக கைது செய்யப்படுகிறார்கள். இந்திய மக்கள் அதிகளவில் செல்லும் கோயில்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த விஷயம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல், ஆந்திர மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் திண்டுக்கல்-ஐ சேர்ந்த அ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். ராஜசேகரன் முக்கிய நபராக உள்ளார். இவருடன் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போல் பாபா டெய்ரி நிறுவனத்தைச் சேர்ந்த விபின் ஜெயின் மற்றும் பொமில் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லூர் வைஷ்ணவி டெய்ரியைச் சேர்ந்த அபூர்வா சவுடாவும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்களாக இந்த நான்கு பேரிடமும் விசாரணை செய்யப்பட்டு பின்னர் கைது செய்துள்ளனர். பின்னர், திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிபிஐ விசாரணையில், லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் பல்வேறு நிலைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது திருப்பதி லட்டுக்களில் கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். தெலுங்கு தேசம் கட்சி (TDP) பின்னர் ஆய்வக அறிக்கையை வெளியிட்டு, இந்த குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்யும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவை என மறுத்துவிட்டது. இதேவேளையில் ஆந்திர அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
ந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனத்தை பிளாக்லிஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.