
ரத்னகிரி,மார்ச் 6- சிவசேனா பெயரையும், சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு அளித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கைப்பாவை உத்தவ் பாலசாகேப் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ரத்னகிரியில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது:- எனது ஆதரவாளர்களுக்கு வழங்க என்னிடம் எதுவும் இல்லை. உங்கள் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் பெற மட்டுமே இங்கே வந்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் கண்புரை நோயால் பாதிக்கப்படவில்லை என்றால் இங்கு வந்து கள நிலவரத்தை பார்க்க வேண்டும். மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம். அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைப்பாவையாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது. நீங்கள்(தேர்தல் ஆணையம்) எங்களிடமிருந்து கட்சியின் பெயரையும் சின்னதையும் பறித்துவிட்டீர்கள், ஆனால் உங்களால் சிவசேனாவை என்னிடம் இருந்து பறிக்க முடியாது. சிவசேனாவை கொடூரமாகவும், ஈவிரக்கமின்றி ஒழித்துக்கட்ட பா.ஜனதா முயற்சி செய்கிறது. பா.ஜனதா அரசியலில் தீண்டத்தகாததாக இருந்தபோது, பாலாசாகேப் தாக்கரே அந்த கட்சிக்கு ஆதரவாக நின்றார்.
முன்பு சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் பா.ஜனதாவில் அங்கம் வகித்தனர். ஆனால் தற்போது அக்கட்சி சந்தர்ப்பவாதிகளால் நிரம்பியுள்ளது. அதிகமான ஊழல்வாதிகள் பா.ஜனதாவில் தான் உள்ளனர்.
முதலில் அவர்கள் (பா.ஜனதா) எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். ஆனால், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் பா.ஜனதாவிலேயே சேர்க்கப்படுகிறார்கள். நான் வேண்டுமா அல்லது ஏக்நாத் ஷிண்டே வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நான் மக்களின் தீர்ப்பை ஏற்றுகொள்வேன்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில்லை. மக்கள் என்னை வேண்டாம் என்று சொன்னால் நான் “வர்ஷா”வை விட்டு வெளியேறியதை போல வெளியேறுவேன். மராட்டிய தேர்தலில் பா.ஜனதாவை தூள், தூளாக்க வேண்டும் மக்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.