
சென்னை: ஜூன் 25-
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தான் தவறு செய்து விட்டதாக அவர் கதறி அழுதார். இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் உட்பட பலரும் சிக்க உள்ளதாகவும் அவர்களின் பெயர் பட்டியல் ரகசியமாக போலீஸார் சேகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஸ்ரீகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருள் காலி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவோடு இரவாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அவர் மாஜிஸ்திரேட்டிடம், நான் தவறு செய்து விட்டேன்.
எனது மகனை கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு கூறி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிறையில் முதல் வகுப்பு வழங்கவும் அனுமதி அளித்தார்.
முன்னதாக நடிகர் ஸ்ரீகாந்த் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம்: கடந்த 2002-ல் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்தேன். நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்ணுடன் 2008-ல் திருமணம் நடைபெற்றது. தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், என்னை வைத்து அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் ‘தீங்கிரை’ என்ற படத்தை இயக்கினார். ஒப்பந்தப்படி முழு பணத்தையும் அவர் தரவில்லை. நாங்கள் சந்தித்தபோதெல்லாம் அவர் என்னை மதுபான கூடத்துக்கு அழைத்துச் செல்வார். பின்னர் போதைப் பொருள் கொடுத்தார். கடன் உட்பட குடும்ப பிரச்சினையால் போதைப் பொருளை அடிக்கடி பயன்படுத்த தொடங்கினேன்.
அதன் பிறகு ஆப்பிரிக்க போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான், சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் உள்ளிட்ட மேலும் சிலரிடம் அடிக்கடி நானே நேரடியாகவும், பிற நபர்கள் மூலமாகவும் போதை வஸ்துவை வாங்கினேன். நான் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருளை பயன்படுத்தி வருகின்றனர். நான் தவறு செய்துவிட்டேன். இவ்வாறு கண்ணீர் மல்க வாக்குமூலமாக அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.இந்தச் சூழலில் இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்டது. தற்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, அவரும் தலைமறைவாக உள்ளார். அவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனிடையே போதைப் பொருட்களையார் பயன்படுத்தினாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழ் திரை உலகிலும் போதைப்பொருள் பயன்பாடு விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. தமிழ் திரைத்துறையினர் பங்கேற்கும் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் சிலர் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிலும் உச்ச நடிகரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட போதைப் பொருட்களை பயன்படுத்தி வரும் நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை போலீஸார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். முதலில் காங்கிரஸ், அடுத்து திமுக, இப்போது அதிமுக.. போதைப் பொருள் வழக்கில் அதிமுக தொழில் நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் (33), கடந்த மாதம் 29-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பிரசாத், தொடக்ககாலத்தில் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாகவும் பதவி வகித்துள்ளார். அதன்பிறகே அதிமுகவில் சேர்ந்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த மதுரை ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜானிடம் போதைப் பொருள் வாங்கி விற்பனை செய்துள்ளார். இதுதொடர்புடைய பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.