மதுபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் பொதுமக்கள் தர்ம அடி

புதுக்கோட்டை: ஜூன் 14 –
புதுக்கோட்டை அருகே மது போதையில் பேருந்து ஓட்டிய டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூருக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தாறுமாறாக ஓடியது. திருவப்பூர் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீதும் பேருந்து மோதியுள்ளது. இதனால் பேருந்து டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை சரமாரியாக அடித்து உதைத்த மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இலுப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் போதே அங்கும் இங்குமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பஸ் சாலையில் மற்ற வாகனங்களில் இடிப்பது போலவே சென்றதாக தெரிகிறது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள், சாலையில் பஸ்சின் பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் டிரைவர் ஏன் இப்படி ஓட்டுகிறார் என சந்தேகமடைந்தனர். இதற்கிடையே பஸ் திருவப்பூர் அருகே வந்த போது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. நல் வாய்ப்பாக பஸ்சில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பஸ் டிரைவரை பிடித்து பயணிகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் சத்தம் போட்டனர். அப்போது தான் பேருந்து டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அந்த டிரைவரை பிடித்து அடித்து உதைத்தனர். கீழே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த பஸ் டிரைவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.