மும்பை பிராந்தியத்தில் குடிசைகள் பகுதி 7.3% ஆக குறைந்தது

மும்பை:நவ.12- மும்பை பிராந்தியத்தில் கடந்த 17 ஆண்டுகளில் குடிசைகள் உள்ள நிலப் பகுதி 8-லிருந்து 7.3% ஆக குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஜான் ப்ரீசென் தலைமையிலான குழுவினர் மும்பை பிராந்தியத்தில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். உயர் தெளிவுத் திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பிற தரவுகளை இந்த ஆய்வுக்காக அவர்கள் பயன்படுத்தினர். கடந்த 2005 ஆண்டுக்கும் 2022-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் வசிக்கும் குடிசைப் பகுதிகள் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு வரைபடமாக்கினர்.
இதன்படி, கடந்த 2005-ம் ஆண்டில் மும்பை பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் குடிசைப் பகுதியின் பங்கு 8 சதவீதமாக இருந்தது. இது 2022-ம் ஆண்டில் 7.3 சதவீதமாகக் குறைந்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் சில பகுதிகளில் குடிசைப் பகுதி குறைந்திருந்த போதிலும் சில பகுதிகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நவி மும்பை மற்றும் மும்ப்ரா பகுதிகளில் குடிசைப் பகுதி 35% அதிகரித்துள்ளது. 2005-ல் 12 சதுர கிலோ மீட்டராக இருந்த குடிசைப் பகுதி 2022-ல் 16.1% ஆக அதிகரித்துள்ளது.
இதுபோல நீர்நிலைகள், ரயில்வே பாதைகளுக்கு அருகே உள்ள குடிசைப்பகுதிகளின் அளவும் கடந்த 17 ஆண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் உள்ள குடிசைப் பகுதிகள் 7% அல்லது 1.8 சதுர கி.மீ. குறைந்துள்ளது. ரயில் பாதைகளில் இருந்து 100 மீட்டருக்குள் இருக்கும் குடிசைப் பகுதிகள் 11.5% அல்லது 3.7 சதுர கி.மீ. குறைந்துள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.