
ஹானோய், ஜூன் 11- வியட்நாமில் மகளுக்கு தங்கம், வைர நகைகள், ரொக்கம் ஆகியவற்றுடன் 100 புனுகு பூனைகளையும் பெற்றோர் வரதட்சணையாக வழங்கியுள்ளனர். புனுகு பூனைகள் ‘காபி லுவாக்’ எனப்படும் விலை உயர்ந்த காபி கொட்டைகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஹாங் சி தாம். இவர் தன் 22 வயது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடத்தி வைத்தார். மகளுக்கு வரதட்சணையாக 25 தங்க கட்டிகள், 30 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் நிறுவன பங்குகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அத்துடன் 100 புனுகு பூனைகளையும் வரதட்சணையாக தந்தார். அதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய். இவை விலை உயர்ந்த காபி லுவாக் எனப்படும் காபி கொட்டைகள் தயாரிப்பில் பங்கு வகிக்கின்றன. காபி செடியின் பழுத்த காபி செர்ரி பழங்கள் புனுகு பூனைக்கு வழங்கப்படும். புனுகு பூனையின் வயிற்றில் இவை ஓரளவு செரிமானம் ஆகும். அதன் வயிற்றில் உள்ள நொதிகள் காபி கொட்டையின் புரதங்களை உடைத்து, காபிக்கு தனித்துவமான சுவையையும், குறைந்த கசப்பையும் அளிக்கிறது.